முகப்பு
வெள்ளிமணி

இறைவன் தந்த உணவு!

வேதாகமத்தில் எகிப்தில் அடிமைகளாக நானூறு ஆண்டுகள் இருந்த எபிரேயர்கள் எனப்பட்ட யூத மக்களை மோசே மூலம் விடுவித்து அவர்கள் சுதந்திரமாக வாழ கானான் என்றும் செழுமை நிறைந்த நாட்டை கர்த்தர் கொடுத்தார். 

பகிர்:


வேதாகமத்தில் எகிப்தில் அடிமைகளாக நானூறு ஆண்டுகள் இருந்த எபிரேயர்கள் எனப்பட்ட யூத மக்களை மோசே மூலம் விடுவித்து அவர்கள் சுதந்திரமாக வாழ கானான் என்றும் செழுமை நிறைந்த நாட்டை கர்த்தர் கொடுத்தார். 
எகிப்து நாட்டிலிருந்து விடுதலைப் பயணம் எப்படி நடந்தது... கர்த்தர் எவ்வாறு வழி நடத்தினார்... நாற்பது ஆண்டுகள் அவர்களுக்கு உணவளித்த செய்தியும் வேதாகமத்தில் உள்ளது: 
எபிரேயர்கள் மோசே சொன்னபடி விடியற்காலமே புறப்பட்டார்கள். செங்கடலை அவர்கள் கடக்க, அற்புதமாய் கடல் தண்ணீர் விலகி தரை வழி விட அக்கறை கடந்தார்கள். 
அவர்களுக்கு உண்ண உணவு இல்லை. மோசே, மக்கள் பட்டினியாக சாகாமல் உணவளிக்க வேண்டினார். கடவுள் அவர்களுக்கு விடியற்காலத்தில் பனி பெய்து, அதன் மீது மன்னா என்னும் உருண்டை வடிவ வெண்நிறப் பொருளை வானத்திலிருந்து பூமியில் விழச் செய்திருந்தார். அதனை சேகரித்து அப்பம் சுட்டுச் சாப்பிடும்படி மோசே பணித்தார். அந்த அப்பம் மிக ருசியாய், சுவை மிகுந்ததாய் இருந்தது. 
மாலையில் கீழ்க்காற்றில் காடைகள் அவர்கள் கூடாரத்தருகே கூட்டம் கூட்டமாக வந்திறங்கின. அவற்றைப் பிடித்து சமைத்து சாப்பிட்டார்கள். ஓய்வு நாளில் அப்படி மன்னா, காடைகள் கிடைக்காது. எனவே, ஒவ்வொருவருக்கும் ஒரு "ஓமர்' என்று அளவு வைத்துக்கொண்டு சாப்பிட்டார்கள். 
தேவைக்கு அதிகமாக சேகரித்து வைத்தால் அவை கெட்டுப் போயின. எனவே, அன்றைக்கு வேண்டியவற்றை மட்டும் சேகரித்தனர். இப்படியாக நாற்பது ஆண்டுகள் உணவளித்தார். 
"உணவு சரியாக சாப்பிட வேண்டும். வீண் செய்து வெளியில் கொட்டக் கூடாது. மீதம் வைக்கக் கூடாது. ஓய்வு நாளில் உபவாசிக்க வேண்டும். அன்று உணவு சமைப்பதை விட்டு, தெய்வத்தைத் தொழ வேண்டும்' என்று கர்த்தர் பணித்தார் (யாத்திராகமம் 16 : 15). 
வேதாகமத்தில் இயேசு செய்த அற்புதம், இருபதாயிரம் பேருக்கு மேல் அப்பமும், வறுத்த மீனும் உணவாகக் கொடுத்தார். 
மூன்று நாள்களாக இயேசுவோடு இருந்தவர்கள் பசியாய் புறப்பட்ட போது, ஒரு சிறுவன், தான் வைத்திருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு வறுத்த மீனையும் கொடுத்தான். இயேசு எல்லோரையும் பந்தி அமரச் செய்து அப்பத்தையும், மீனையும் பிட்டுப் பிட்டுக் கொடுத்தார். எல்லோருக்கும் உணவு கிடைத்தது. சாப்பிட்டபின் மீதியும் அவர்கள் கையில் இருந்தது. இயேசு, உணவை வீணாக்கக் கூடாது எனக் கற்றுத் தந்தார். பசியுற்றோருக்கு உணவளிப்போம். என்றும் இறையருள் நம்மோடு..! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.