முகப்பு
வெள்ளிமணி

ஜடப் பொருளும் பேசும்!

ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் சார்பில் இயங்கும் பல பிரிவுகளில் காகித ஆலையும் ஒன்று. ஒவ்வொரு பிரிவையும் ஸ்ரீஅன்னை நேரில் சென்று பார்வையிடுவது வழக்கமாக இருந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:


ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் சார்பில் இயங்கும் பல பிரிவுகளில் காகித ஆலையும் ஒன்று. ஒவ்வொரு பிரிவையும் ஸ்ரீஅன்னை நேரில் சென்று பார்வையிடுவது வழக்கமாக இருந்தது.

அதன்படி, ஒரு நாள் அன்னை காகித ஆலைக்குச் செல்ல முடிவு செய்து இருந்தார். இதனை அறிந்த சாதகர்கள் ஆலையின் வெளிப்புறமும், உட்புறமும் வழக்கமாக இருப்பதைவிடத் தூய்மையாக இருக்க வேண்டும் என்று கருதி, எல்லா இடங்களையும் சரி செய்துவிட்டு அன்னையின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

அன்னை வந்தார். உள்ளே நுழைந்ததும் சுற்றும் முற்றும் பார்த்தார். பின்னர், அங்கிருந்த ஒரு மர அலமாரியை நோக்கிச் சென்றார். அதன் கதவைத் திறக்கும்படி கூறினார் அன்னை. சாதகர்கள் தயங்கியபடியே கதவைத் திறந்தார்கள். அதனுள் பல விதமான பொருள்கள் தாறுமாறாக திணித்து வைக்கப்பட்டிருந்தன.

உடனே அன்னை கூறினார்: ""இந்தப் பொருள்களை உடனே வெளியே எடுத்து, அதனதன் இடங்களில் சீராக அடுக்கி வைக்க வேண்டும்!'' என்றார். பிறகு காகித ஆலையின் மற்ற பகுதிகளைப்பார்வையிட்டு விட்டு, ஆசிரமம் திரும்பினார்.

சாதகர்கள் திகைத்து நின்றார்கள். "நாம் தூய்மையாக இருப்பதை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக அன்னை வரும்பொழுது, சிதறிக்கிடந்த பொருள்களை எல்லாம் எடுத்து, அந்த அலமாரியில் திணித்து வைத்தோம். இது எப்படி அன்னைக்குத் தெரிய வந்தது?' என்று குழம்பினார்கள்.

இதனை ஒரு சாதகர் அன்னையிடமே கேட்டார். ""அலமாரியில் பொருள்கள் அலங்கோலமாகக் கிடந்ததை எப்படி அறிந்தீர்கள்..?''

அன்னை கூறினார்: ""நான் அங்கே சென்ற உடனே, அந்தப் பொருள்கள் என்னிடம் முறையிட்டன. இதோ எங்களை வந்து பாருங்கள்... எங்களை எப்படி போட்டு வைத்திருக்கிறார்கள் என்று கூப்பிடும் குரல் கேட்டேன். அது என் காதில் விழுந்தது. ஆகையால்தான் நான் அந்த மர அலமாரியை திறந்து பார்க்க நேர்ந்தது. ஜடப் பொருள்கள் பேசும் என்பதை நேரில் பார்த்தோம்'' என்றார் அன்னை!

ஜடப்பொருள்கள் மீது திணிக்கப்பட்ட துன்பமானவை, நம் வாழ்க்கையில் தடையாக மாறி பல துன்பங்களை உருவாக்குகின்றன. பொருள் நம்மை நாடி வர வேண்டுமானால், நாம் எந்தப் பொருளையும் பரிவோடும், முறையோடும் கையாளவேண்டும்.

நம் வாழ்க்கையில் அன்றாடம் உபயோகிக்கும் துணி முதலான பொருள்கள் கிழிந்து அல்லது உபயோகமற்றுப் போய்விட்டால் அதனை அலட்சியமாகத் தூக்கிப் போடாமல், இவ்வளவு நாள் நமக்கு பயனுள்ளதாக இருந்ததற்கு நன்றி செலுத்தவேண்டும்.

பேசாத பொருள்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களால் பொருட் செல்வம் கிடைப்பது தடைப்படும். தூய்மை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பொருள்களை வீண் விரயம் செய்யாமல் இருத்தலுமாகும்.

"சுத்தம் சோறு போடும்' என்பது பழமொழி. ஒழுங்கு சுத்தத்தை விட உயர்ந்தது என்பதும்அன்னையின் நெறிமுறைகளில் ஒன்றாகும்.

ஸ்ரீஅரவிந்தரை சந்திக்க வந்த ஓர் அன்பர், அவசர கதியில் செருப்பை அலட்சியமாகத் தள்ளிவிட்டு, கதவை காலால் உதைத்தபடி உள்ளே நுழைந்தார். அவரிடம் அரவிந்தர் கூறினார்: ""நீங்கள் அந்த செருப்பிடமும், கதவிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு உள்ளே வாருங்கள்'' என்றார்.

அரவிந்த ஆசிரமத்தில் இது போன்ற பலநிகழ்ச்சிகள் நடந்ததுண்டு..!

அன்னையின் எழுத்துகளிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.