முகப்பு
வெள்ளிமணி

தசரத மைந்தனின் தைப்பூச கிரிவலம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பாலாற்றின் ஓரம் உள்ள உத்தர ரங்கநாதர் கோயில் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலமாகும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
பகிர்:


வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் பாலாற்றின் ஓரம் உள்ள உத்தர ரங்கநாதர் கோயில் இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலமாகும். இந்தப் பெருமாள் பிரம்மனின் யாகத்தைக் காத்தருளியவர்.இந்த வரலாறுகள் பிரம்மாண்ட புராணத்தில் இரண்டு அத்தியாயங்களில் உள்ளது. நாரதர், பிருகு மகரிஷிக்குச் சொல்வதாகவும், காஞ்சி மகாத்மியத்திலும், ஹஸ்தகிரி மகாத்மியத்திலும் சொல்லப்பட்டுள்ளது. 

திருவரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்பவர் சூரிய பகவான். சூரியகுல அரசன் இட்சுவாகு ரங்கநாதர் சிலையை அயோத்திக்கு கொண்டு சென்றான். ராமர் அச்சிலையை பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். 

இதனை விபீஷணன் இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் திருவரங்கன் திருவுளப்படி காவிரியாற்றின் கரையில் பள்ளிகொண்டார். தெற்கே ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ளவர் வடக்கே விச்சூர் என்னுமிடத்தில் பள்ளிகொள்ள அவர் உத்தர ரங்கநாதர் என அழைக்கப்பட்டார். தெற்கேயிருந்து வந்து பள்ளி கொண்ட இடம் "பள்ளிகொண்டான்' என அழைக்கப்பட்டது. 

காஞ்சியில் பிரம்மனின் யாகம் நடைபெற்றபோது, பாலாற்று வெள்ளத்தால் இடையூறு ஏற்பட்டது. அப்போது பெருமாள், வெள்ளத்தைத் தடுக்க பாலாற்றில் படுத்து, பிரம்மனின் யாகத்தைக் காத்தார். 

பாலாற்றின் தென்கரையில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம், அதன் இடது புறம் வியாச புஷ்கரணி, இரண்டு திருச்சுற்றுகள். ரங்கநாயகித் தாயார் நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருளாசி வழங்குகிறாள். மூலவர், தெற்கே தலை வைத்து, வடக்கே தன் திருப்பாதங்களைக் காட்டி, ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டுள்ளார். திருமார்பில் திருமகளும், நாபித்தாமரையில் நான்முகனும், அருகே ஸ்ரீதேவியும், பூதேவியும் அருள்கின்றனர். 

திருமணப்பேறு வழங்கும் பரிகாரத் தலமான இத்தலத்தில் ரங்கநாதர் சின்னஞ்சிறு வடிவில் சயனித்துள்ளதால் "பால ரங்கநாதன்' ஆகவும், மஹா மண்டபத்தில் "கஸ்தூரிரங்கன்' எனும் சோட்டா ரங்கநாதராகவும் அருள்கின்றார். பாதிரி மற்றும் பாரிஜாதம் தலமரமாகவும், தீர்த்தமாக வியாச புஷ்கரணியும் "க்ஷீரநதி' அல்லது "பத்மினி' எனும் பாலாறும் அருகே ஓடுகிறது . 
இக்கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரை பெருமாள் கோயில் உற்சவங்கள் பலவும் கொண்டாடப்படுகின்றன. ஆனாலும் தைப்பூச கிரிவலம் சிறப்பானது. இறைவன் உள்ள மலையை பக்தர்கள் வலம் வருவது வழக்கம். ஆனால் தைப்பூசத்தன்று பெருமாள் மலையைச் சுற்றி வந்து மக்களுக்கு அருளும் கிரிவலமாகுமிது.

ஸ்ரீ நாராயணனை தரிசனம் செய்ய அம்பரீஷ மகரிஷி பீஜாசல பர்வதத்தில் அமர்ந்து தவம் புரிந்தார். கடும் தவத்தின் தொடர்ச்சியாக யாகம் இயற்றத் தொடங்கினார். யாகத்திற்கு வந்தவர்களுக்குப் பயன்படுமாறு இங்குள்ள நதியில் பால் பெருகியது. அதனால் இந்த நதிக்கு "பாலாறு' என்று பெயர் வந்தது. மலையில் பல சுனைகள் உண்டு. சம்பாதி தீர்த்தம், அம்பரீஷ தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன இத்தனை பெருமைகளை உடைய பீஜாக்ஷர மலையைச் சுற்றிலும் ஸ்ரீராமபுரம், கந்தனேரி, கன்னிகாபுரம், கழனிபாக்கம், பனந்தோப்புபட்டி, சாரதி பேட்டை, பிராமண மங்களம், திருவள்ளுவர் நகர், கோவிந்தபாடி,வெட்டுவானம் போன்ற பல கிராமங்கள் அமைந்துள்ளன. 

பள்ளிகொண்டாவில் குடியிருக்கும் ரங்கநாதர் தனது பக்தர்களையும், மக்களையும் காப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, அவர்களின் வாழிடங்களையும், நிலங்களையும் பார்த்து அருளிவருமாறு ஸ்ரீராமனை வேண்டிக்கொண்டார். 

கோயிலில் தனி சந்நிதியில் உறையும் ஸ்ரீராமபிரான் தை புனர்பூசத்தில் திருக்கோயிலில் இருந்து கிளம்பி, மலை அடிவாரம் வரைசென்று பின்னர் கிராமத்திலுள்ள அனைத்து வீதிகளுக்கும் வலம் சென்று நலம் விசாரித்து மாலை திருக்கோயிலுக்குத் திரும்புவார். 

மறுநாள் அதிகாலை கிளம்பி வித்து மலை அடிவாரத்திற்குச் சென்று மலையைச் சுற்றி உள்ள சுமார் 40 கிராமங்களுக்கும் ரங்கநாதர் சார்பாகச் சென்று, மக்களுக்கு ஆசி வழங்கி திரும்பக்கூடிய நாள் தைப்பூச நாளாகும். தசரத மைந்தனின் தைப்பூச கிரிவலம் வரும் 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

திருக்கோயிலுக்கு சந்தர்ப்ப சூழலால் வரமுடியாதவர்கள் அனைவருக்கும் பள்ளிகொண்ட அரங்கன் சார்பாக தசரத ராமன் நேரில் சென்று அனுக்ரகம் செய்கிறார் என்பது ஐதீகம். 

வேலூர் - குடியாத்தம் வழித்தடத்தில், வேலூருக்கு மேற்கே 23 கி.மீ. தொலைவில் பள்ளிகொண்டா அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு: 99943 84769.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.