முகப்பு
வெள்ளிமணி

ஆபத்தை நீக்கிய நீலகண்ட நரசிம்மன்!

மத்வ பரம்பரையில் ஸ்ரீராகவேந்தரரின் பரமகுரு ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த ஸ்வாமிகள் ஆவார். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

மத்வ பரம்பரையில் ஸ்ரீராகவேந்தரரின் பரமகுரு ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த ஸ்வாமிகள் ஆவார். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். விஜய நகரப் பேரரசர்களால் பெரிதும் போற்றப்பட்டவர். தஞ்சை நாயக்க மன்னர்களின் அபிமானத்திற்கும் உரியவராகத் திகழ்ந்தார். இவருடைய இயற்பெயர் விஷ்ணு தீர்த்தர் என்பதாகும். தனது இளம் வயதில் குரு வ்யாஸ ராயர் மூலம் 64 கலைகளையும் கற்றறிந்து தேர்ச்சி பெற்றவர். பாம்பாட்டி வித்தையிலிருந்து கழைக்கூத்தாடி வித்தை வரை கற்று, அவ்வவற்றில் வல்லுநர்களுடன் போட்டியிட்டு தாம் அதில் தேர்ந்தவர் என்பதை நிரூபணம் செய்தவர்.
 ஒரு சமயம் தீர்த்தரிடம் கங்காதர பண்டிதர் என்பவர் வாதத்திற்கு வந்தார். சொற்போரின் நடுவராக இவருடைய சமகாலத்தவரான மகான் ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் இருந்தார். இறுதியில் விஜயீந்திர தீர்த்தர் வென்றார்.
 பின்னர் பண்டிதரிடம் " என்னைக் கொல்ல விஷம் கொண்டு வந்தீர்களே, அது எங்கே?' என்று கேட்டார். பதறிப்போன பண்டிதர் , "அதைத் தர இயலாது' என்று சொல்லி மன்னிப்பு கேட்டார்.
 ஆயினும் தீர்த்தர் வற்புறுத்தி அந்த விஷத்தை வாங்கி உட்கொண்டு விட்டார். விஷத்தின் தாக்கத்தினால் அவரின் உடல் நீல நிறம் எய்தியது. உடனே தான் பூஜித்து வந்த சோடச ஹஸ்த நரசிம்மரை (16 கரங்களுடன் உள்ள நரசிம்மர் ) தியானித்து வந்த வண்ணம் இருந்தார். சிறிது நேரத்தில் சகஜ நிலைமைக்குத் திரும்பினார், தீர்த்தர். ஆனால் அதே சமயம், அந்த விஷத்தை நரசிம்மன் ஏற்று கொண்டதற்கு அடையாளமாக விக்கிரகத்தின் கழுத்து பகுதி நீல நிறமாக மாறியது. பக்தன் பிரஹலாதனையும், பக்தை மீராவையும் விஷத்திலிருந்து காப்பாற்றியது போல் பகவான், ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரையும் ஆபத்திலிருந்து காப்பாற்றி ஆட்கொண்டது தெய்வ அனுக்கிரஹம் அல்லவா?
 நீலகண்ட நரசிம்மர் மீது இவர் இயற்றிய "ந்ருஸிம்ஹாஷ்டாக தோத்திரம்' பக்தர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
 இவருக்கு அருள்புரிந்த அந்த விக்கிரகம் தற்போது மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தில் பிரத்யேக பூஜையில் உள்ளது. வருடந்தோறும் ஸ்ரீ நரசிம்ம ஜயந்தியன்று மட்டும் சோடச ஹஸ்த நரசிம்மர் விக்கிரகம் வெளியில் கொண்டு வரப்பட்டு திருமஞ்சனம், ஆராதனம் முடிந்தவுடன், பக்தர்கள் தரிசிப்பதற்காக, தற்போதைய பீடாதிபதி திருக்கரங்களினால் காண்பிக்கப்படுகிறது.
 -எஸ். வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments