வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவராக தமிம் இக்பால் நியமனம்!
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வங்கதேச முன்னாள் வீரர் தமிம் இக்பாலை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக வங்கதேச முன்னாள் வீரர் தமிம் இக்பாலை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
அமினுல் இஸ்லாம் தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் வாரியக் குழுவை கலைத்து தமிம் இக்பால் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத் தேர்தல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அதனை விசாரிக்க 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அமினுல் இஸ்லாம் தலைமையிலான கிரிக்கெட் வாரியக் குழு கலைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
37 வயதாகும் தமிம் இக்பால் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் மிகவும் இளம் தலைவராக மாறியுள்ளார். அவர் 11 பேர் கொண்ட குழுவை வழிநடத்தவுள்ளார்.
Advertisement
கடந்த ஆண்டு வங்கதேச கிரிக்கெட் வாரியத் தேர்தலுக்குப் பிறகு, வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து மிகுந்த அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் வங்கதேசம் விளையாடவில்லை. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் பல குழப்பங்கள் இருந்ததாகவும், அரசியல் தலையீடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது புதிய தலைவராக தமிம் இக்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிம் இக்பால், வங்கதேச அணிக்காக 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்ட்டில் 5134 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 8357 ரன்களும், டி20 போட்டிகளில் 1758 ரன்களும் எடுத்துள்ளார்.