மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது...
கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முக்கிய வாக்குறுதிகளாக மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000, பெண்கள் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி பயிலலாம், அரசு பதிவியேற்ற ஓராண்டுக்குள் அரசுத் துறைகளில் காலியாகவுள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும் ஆகியவை இடம்பிடித்திருக்கின்றன.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு இருகட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதியும், மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதியும் என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்று(ஏப். 7) மாலை அக்கட்சியின் தேசியத் தலைவர் கார்கே வெளியிட்டார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக மூன்றாவது மாற்று சக்தி காங்கிரஸ் என்று குறிப்பிட்டார்.
Advertisement
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் :
மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 வழங்கப்படும்
அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் இலவசமாகச் செல்லலாம்
செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டு சிறப்பு மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10 லட்சம் வரை மருத்துவ காப்பீடு
சொந்த நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 15,000 வழங்கப்படும் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. வரும் தேர்தலில், பாஜகவின் கடும் சவாலைச் சமாளிக்க திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் வியூகத்தை வகுத்து தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அவர்கள் இருவரையும் எதிர்த்து காங்கிரஸும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது.