பொதுவாக சிவாலயங்களில் பைரவருக்கு தனிச்சந்நிதி இருக்கும். சில கோயில்களில் பைரவர் மிகவும் மகிமை வாய்ந்தவராக விளங்குவதால், அவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அப்படிப்பட்ட கோயில்களுள் ஒன்று, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டூர் ஊராட்சி, கோவில்பட்டி கிராமத்திலுள்ள ஸ்ரீசெüந்தரநாயகி சமேத ஸ்ரீசோழீசுவரர் கோயில்.
இந்த சிவன் கோயிலை பக்தர்கள் ஸ்ரீகாலபரைவர் கோயில் என்றே அழைக்கின்றனர். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் அபிஷேகம், மகாதீபம் ஏற்றுதல், அன்னதானம் போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் இங்கே நடைபெற்று வருகிறது. இங்குள்ள காலபைரவரை வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள் விலகுகிறதாம். பைரவர் உச்சாடனமே இக்கோயிலின் சிறப்பாகும்.
கோட்டூர் கோவில்பட்டி சிவன் கோயில் பிற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட கருங்கல் கோயிலாகும்.
இக்கோயிலை திருமயம் வட்டத்தைச் சேர்ந்த கடியாப்பட்டி தி.சொ.நகரத்தார் குடும்பத்தினர் சுமார் 120ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்து, குடமுழுக்குச் செய்துள்ளனர். அந்நேரத்தில் புதிய கோயிலாக மாற்றப்பட்டது. அக்காலத்தில் இப்பகுதியில் வசித்த சித்தர் ஒருவர் இங்குள்ள சிவனை வழிபட்டதாகவும், அவர் இங்கேயே அடக்கமானதால் இன்றைக்கு அது கருப்பர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வூரில் மழைவேண்டி நடத்தப்படும் மஞ்சுவிரட்டில், கோவில்பட்டி சிவன் கோயில் காளை கோட்டூர் பாசனக்குளத்தில் எந்த இடத்தில் வந்து கரையேறுகிறதோ அந்த இடம் வரை தான் பாசனக்குளம் நிரம்புவது வாடிக்கை. அந்தக் காளை குளத்தின் கலிங்கில் வந்து ஏறினால், அவ்வாண்டு குளம் நன்கு பெருகி , மிகை நீர் கலிங்கில் போகும், அந்தளவுக்கு இங்குள்ள ஸ்ரீகால பைரவர் சக்திமிக்கவர்.
வருகிற 14.10.2025 தேய்பிறை அஷ்டமி நாளில் கோபூஜை, மகா யாகம், பைரவர் அபிஷேகம், சாமி வீதிஉலா, அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.