முகப்பு
வெள்ளிமணி

செந்தீயில் வந்தெழுந்த திருத்தொண்டர்

கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆதனூர் கிராமத்தில் நந்தனார் என்பவர் வசித்து வந்தார்.

Updated On : 23 ஜனவரி, 2026 at 11:14 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆதனூர் கிராமத்தில் நந்தனார் என்பவர் வசித்து வந்தார். அவர் சிவன் கோயில்களுக்கு வெளியே நின்று மனமுருகிப் பாடி, சிவத் தொண்டு புரிந்துவந்தார். நந்தனார் கிராமத் தெய்வங்களுக்கு உயிர் பலியிட்டு வழிபடுவதைத் தடுத்தார்.

அக்காலத்தில் நந்தனார் சார்ந்த பட்டியலினத்தவர்கள் சிதம்பரம் கோயில் கோபுரத்தை மட்டுமே தரிசிக்க அனுமதி இருந்தது. அவருக்கு எப்படியாவது கோயிலுக்குச் சென்று, பதிகம் பாட வேண்டும் என ஆசை. அதற்கு அவரது பண்ணையார் தடைவிதிக்க, நந்தனாரோ, "நாளை போகலாம்... நாளை போகலாம்' எனத் தம் ஆசையை அடக்கி வந்துள்ளார்.

ஒருநாள், "சிதம்பரத்துக்குச் செல்லவேண்டும்' என நந்தனார் கேட்டபோது, "அறுவடையை முடித்துவிட்டுச் செல்லவேண்டும்' என்று நிலச்சுவான்தார் உத்தரவிட்டுள்ளார்.

"240 ஏக்கர் பயிர் அறுவடையை ஒரே இரவில் முடிக்க முடியாதே...' என்று நந்தனார் வருத்தம் அடைந்தார்.

இதனை அறிந்த சிவனே அங்கு வந்து, இரவோடு இரவாக அறுவடையை முடித்துள்ளார். இதையறிந்த நிலச்சுவான்தாரும் மெய்சிலிர்த்து, நந்தனாரின் காலில் விழுந்து அவரை சிதம்பரம் போக அனுமதித்தார்.

இந்த நேரத்தில் சிதம்பரம் அந்தணர்களின் கனவில் சிவன் தோன்றி, "நந்தனாரைக் கோயிலுக்கு அழைத்து வாருங்கள்' எனக் கூறியுள்ளார்.

இதற்கு அந்தணர்களோ, "நந்தனார் கோயிலில் நுழைய வேண்டும் என்றால் தீக்குள் இறங்கவேண்டும்' என்றனர்.

நந்தனாரும் கோயிலுக்குத் தெற்குப்புறத்தில் உள்ள ஓமக்குளம் பகுதியில் தங்கியிருந்து, ஹோம நெருப்புக்குள் புகுந்து, புது உடலோடு கோயிலுக்குள் சென்று ஐக்கியமானார். இதனால் இவர் 63 நாயன்மார்களில் ஒருவராக, "திருநாளைப்போவார்' என அழைக்கப்பட்டார்.

பிற்காலத்தில், நந்தனாரின் பக்தியை அறிந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சுவாமி சகஜானந்தா, ஓமக்குளத்தில் நந்தனார் இருந்த இடத்தில் வசித்து, அவரது புகழைப் பரப்பி வந்தார்.

சட்ட மேலவை உறுப்பினராகவும், சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் இருந்த சகஜானந்தா உருவாக்கிய நந்தனார் பள்ளிகள் இன்றும் உள்ளன. நந்தனார் வாழ்ந்த இடம் நந்தனார் மடமாக மாறியது. இதே இடத்தில் சகஜானந்தாவுக்கு சமாதியும், செüந்தர நாயகி சமேத சிவலோகநாதர் கோயிலும் அமைந்துள்ளன.

சகஜானந்தாவின் கல்விச் சேவையைப் போற்றும் வகையில், நந்தனார் ஆண்கள் பள்ளி வாயிலில் தமிழ்நாடு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தினம் தலைமையிலான கல்விக் கழக உறுப்பினர்கள் இணைந்து, நந்தனார் மடத்துக்குத் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் கோயில் குடமுழுக்கு விழா, சுவாமி சகஜானந்தா பிறந்த நாளான ஜன 27-இல் தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →