சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள ஶ்ரீ நந்தனார் கோயில் மற்றும் செளந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் இன்று(ஜன. 26) தொடங்கியது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மடத்தில் உள்ள திருநாளைப்போவார் என்கிற நந்தனார் கோயில் மற்றும் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 28-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
மேலும், நந்தனாரின் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு அதில் நந்தனாரின் வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்படவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன், நவக்கிரக ஹோமம் மற்றும் மகாலட்சுமி ஹோமங்களுடன் யாகாசாலை பூஜை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
அ. சம்பந்த தீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் ஹோமங்களை நடத்தினர். யாகசாலை பூஜையை நந்தனார் கல்விக்கழகத் தலைவர் கே.ஐ.மணிரத்தனம் சங்கல்பம் செய்து தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயலாளர் வி. திருவாசகம், பொருளாளர் டி. ஜெயச்சந்திரன், ஆலோசகர் ஏ. தெய்வநாயகம், மட நிர்வாகக்குழு செயலர் டி.கே. எம்.வினோபா, நிர்வாகிகள் ஏ.சங்கரன், பி. பன்னீர்செல்வம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், ஜன. 26-ம் தேதி யாகசாலையில் கும்பங்களில் சுவாமிகள் ஆராஹணம் செய்யப்பட்ட திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், முதல் கால யாகபூஜை மற்றும் பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெறவுள்ளது. 27-ம் தேதி காலை 2-ம் கால யாகபூஜையும், மாலை 3-ம் கால யாகபூஜையும், ருத்ர ஹோமம், வஹோதார ஹோமம் மற்றும் பூர்ணாஹீதி நடைபெறவுள்ளது.
வரும் ஜன. 28-ம் தேதி புதன்கிழமை காலை 4-ம் கால யாகபூஜையும், நாடி சந்தானம், பூர்ணாஹூதி தீபாராதனை முடிவுற்று யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு ஊர்வலமாக சென்று காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாக கோயில் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார் கும்பநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.