கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!
கார்த்தி சிதம்பரத்தின் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பற்றி...
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் தெருவில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மற்றும் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தை இன்று காலை திறக்க வந்த ஊழியர்கள், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி மற்றும் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
எம்பி அலுவலகத்தில் இருந்து கண்காணிப்பு கேமிரா உடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அருகேவுள்ள கட்டடங்களில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காரைக்குடி காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
”கூட்டணிக் கட்சித் தலைவரின் எம்பி அலுவலகத்தை பாதுகாக்கக் கூட திமுக அரசுக்கு துப்பில்லையா?” என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.