மலாலாவுக்கு விருது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
பாகிஸ்தானில் கல்வி உரிமைக்காகப் போராடிய மலாலாவுக்கு அமெரிக்காவின் உயரிய விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கல்வி உரிமைக்காகப் போராடிய மலாலாவுக்கு அமெரிக்காவின் உயரிய விருதை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெண் கல்வி உரிமைக்காகப் போராடிய சிறுமி மலாலா யூசுஃப்சாய், தலிபான்களால் சுடப்பட்டு, பிரிட்டனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பிரிட்டனில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மலாலாவின் துணிச்சலையும், சேவையையும் பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப் பதக்கத்தை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கான தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஷீலா ஜாக்ஸன் லீ வெள்ளிக்கிழமை கொண்டு வந்தார். அவர் கூறுகையில், ""கல்வி, நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடிய மலாலாவுக்கு இவ்விருதை வழங்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு தேசத்தில் மலாலா நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்'' என்றார்.
இதே போன்றதொரு தீர்மானத்தை கடந்த ஆண்டு நவம்பரில் 13ஆம் தேதி ஷீலா ஜாக்ஸன் லீ கொண்டு வந்தார். ஆனால், அது நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், அதே மசோதாவை மீண்டும் இப்போது கொண்டு வந்துள்ளார்.