ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இணையம் குறித்த உலகளாவிய மாநாடு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
இணையத் துறையில் பெரிய நிகழ்வாகக் கருதப்படும் "தி ரஷியன் இண்டர்நெட் வீக்'(ஆர்.ஐ.டபிள்யூ- 2013) எனப்படும் இந்த மாநாடு 6ஆவது முறையாக நடைபெறுகிறது. 3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இணையத்துறையில் கட்டுப்பாடு, இணைய வர்த்தகத்தின் போக்குகள், நவீன இணையத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், இணையத்தில் திறமையான விளம்பரங்களுக்கான தொழில்நுட்பங்கள், தேடல் இயந்திரங்களின் புதிய வழிமுறைகள் மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற தலைப்புகளில் கலந்தாலோசிக்கப்படும் என்று மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரஷியத் தொழிலதிபர்கள், தகவல் தொடர்பு மற்றும் இணையத் தொழில்நுட்ப நிபுணர்கள் மட்டுமின்றி வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் இணைய பயனாளிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டிற்காக புதுமையான காட்சிக்கூடம் ஒன்றினை அமைத்துள்ளதாகவும், இதில் கலந்துகொள்ள 14,500 பார்வையாளர்களை எதிர்நோக்குவதாகவும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.