தமிழ் வம்சாவளி எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது
ஆண்டுதோறும் வழங்கப்படும் தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது இந்த ஆண்டு, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு வழங்கப்படுகிறது.
ஆசியான் நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது இந்த ஆண்டு, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர் ஜே.எம்.சாலிக்கு வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் வசிக்கும் ஜே.எம்.சாலி என்று அழைக்கப்படும் ஜமாலூதீன் முகம்மது சாலி (76), சென்னையை பூர்விகமாக கொண்டவர்.
தனது 25 வயதில் சிங்கப்பூர் சென்ற அவர் தமிழ் முரசு நாளிதழில் துணை ஆசிரியரராக தனது பணியை தொடங்கினார். பின்னர் சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் தொலைகாட்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். அப்போது அவர் தற்காப்புக் கலை ஜாம்பாவான் புரூஸ் லீ, புகழ்பெற்ற குத்துசண்டை வீரர் முகம்மது அலி ஆகியோர் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளார்.
Advertisement
கடந்த 2000 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் முழு நேர எழுத்து பணியில் கவனம் செலுத்தி வருகிறார் சாலி.
57 புத்தகங்கள், 80 நாடகங்கள் மற்றும் 400க்கும் அதிகமான சிறுகதைகளை சாலி எழுதியுள்ளார். அவர் எழுதிய 'வெள்ளை கோடுகள்', 'அலைகள் பேசுகின்றன' ஆகிய சிறுகதைகள் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாணவர்களளால் இன்றும் பயிலப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உள்ள சஞ்சிகைகள் தொடர்ந்து எழுதுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றன. அவர்கள் போதும் என்று சொல்லும் வரை நான் தொடர்ந்து எழுதுவேன் என சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார் சாலி.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில், ஜே.எம்.சாலிக்கு தென்கிழக்கு ஆசிய இலக்கிய விருது வழங்கப்படுகிறது. கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருது, தெற்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் (ஆசியான்) இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.