நைஜீரியாவில் தேவாலய கூரை இடிந்து விழுந்து விபத்து: 60 பேர் பலி!
நைஜீரியாவின் அக்வா இபோம் மாநிலத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில், மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலியானார்கள்.
நைஜர்: நைஜீரியாவின் அக்வா இபோம் மாநிலத்தில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில், மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 60 பேர் பலியானார்கள்.
நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள மாநிலம் அக்வா இபோம். இம்மாநில தலைநகரான உயோவில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. இங்கு தற்பொழுது விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அந்த தேவாலயத்திற்கு உரிமையான திருச்சபையின் நிறுவனரான அகான் வீக்ஸ் என்பவருக்கு பிஷப் பட்டம் வழங்கும் விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது.
பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்ற இவ்விழாவினைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்தனர். அப்பொழுது கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவந்த தேவாலய கட்டிடத்தின் மேற்கூரையை தாங்கிப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரங்கள் எதிர்பாராதவிதமாக ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து விழுந்தன.
இதையடுத்து, பூச்சு சரியாக காயாமல் இருந்த மேற்கூரை மொத்தமும் நிகழ்விற்காக கூடியிருந்த மக்களின் தலை மீது விழுந்தது. சில நொடிகளில் அந்த இடம் மண் மூடப்பட்டு மேடாகிப் போனது.
சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய பலரை மீட்டு, ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை 60 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளதாக மாநில கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.