பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு லாகூரில் உள்ள பிரபலமான குல்ஷான் - இ-இக்பால் பூங்காவில் குவிந்திருந்த கிறிஸ்துவ மக்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாக கிறிஸ்தவர்களால் கருதப்படும் ஈஸ்டர் தினம், உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு லாகூர் நகரில் உள்ள குல்ஷான்-இ-இக்பால் பூங்காவில் மாலை நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கூடியிருந்தனர்.
அப்போது, சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில், 56 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிந்ததால் உயிரிழப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.
குண்டு வெடித்த இடத்தில் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும், அந்த இடமே ரத்தமயமாக மாறிவிட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சொந்த ஊரான லாகூர், நாட்டின் பிற பகுதிகளை விட வன்முறைச் சம்பவங்கள் குறைவாக நடக்கும் இடமாகும். இப்போது, அங்கு பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தியிருப்பது பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.