உலகம்

ஸ்பெயினில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

DIN

பார்சிலோனா தாக்குதலுடன் தொடர்புடைய 5 பயங்கரவாதிகள் ஸ்பெயின் போலீஸாரால் வெள்ளிக்கிழமை காலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த பயங்கரவாதிகளுக்கும் பார்சிலோனா நடைபாதையில் வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் மீது வாகனத்தை மோதி தாக்குதலை நிகழ்த்திய நபர் அல்லது நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர். பயங்கரவாதத் தாக்குதல் என்று ஸ்பெயின் காவல் துறையினர் குறிப்பிட்ட அந்தத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
இந்நிலையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்த விவரம்:
பார்சிலோனா தாக்குதலைத் தொடர்ந்து காவல் துறையினரும் பயங்கரவாதத் தடுப்புப் படையும் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்பெயினின் வட கிழக்குப் பகுதியான கேடலோனியாவில் உள்ள கேம்பிரில்ஸ் என்னும் கரையோர நகரில் கடற்கரைப் பகுதியில் 5 பயங்கரவாதிகளை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களிடமிருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பொருத்திய பெல்ட்டுகள், வெடிகுண்டு அங்கிகள் கைப்பற்றப்பட்டன. இந்த பயங்கரவாதிகளுக்கும் பார்சிலோனாவில் கூட்டத்தில் வாகனத்தை மோதி தாக்குதல் நடத்திய நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கேடலோனியா மாகாண உள்துறை அமைச்சர் ஜோக்கின் ஃபோர்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பார்சிலோனாவில் புகழ் பெற்ற லாஸ் ராம்பிலாஸ் வீதியில் மக்கள் கூட்டத்தின் இடையே வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து மோதி நிகழ்த்திய தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில் மேலும் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தாக்குதலை நிகழ்த்திய வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார். அவருக்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தத் தாக்குதலை ஒரு நபர் நிகழ்த்தினாரா அல்லது அவருக்கு கூட்டாளி எவரேனும் இருந்தனரா என்பது தெரியவில்லை.
பார்சிலோனா தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. தங்களது இயக்கத்தைச் சேர்ந்த வீரர் தாக்குதலை நிகழ்த்தியதாக இணையதளத்தில் ஐ.எஸ். தகவல் வெளியிட்டது.
இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட அடுத்த நாளே கடற்கரை நகரான கேம்பிரில்ஸில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வியாழக்கிழமை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் பார்சிலோனா நகரில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
அதில் ஸ்பெயின் அரசர் பிலிப், பிரதமர் மரியானோ ரஜோய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்த கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT