இளமை திரும்ப இளைஞர்களின் ரத்தம்: முதியவர்களுக்கு ஒரு வித்தியாச சிகிச்சை முறை!
வயதானவர்கள் தங்கள் இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை செலுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ: வயதானவர்கள் தங்கள் இளமையை மீட்க இளைஞர்களின் ரத்தத்தை செலுத்தும் புதிய சிகிச்சை முறை ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று வயதானவர்கள் தங்கள் உடலில் இளைஞர்களின் ரத்தத்தை ஏற்றிக் கொள்வதன் மூலம் உத்வேத்துடன் செயல்படலாம் என அறிவிப்பு அளித்துள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 8,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.
முதலில் இது தொடர்பான சோதனை சிகிச்சை முறை எலிகள் மத்தியில் செய்து பார்க்கப்பட்டதாகவும், அந்த முடிவுகள் தந்த நம்பிக்ககையில்தான் தற்பொழுது இது பரீட்சார்த்த அடிப்படையில் செய்யப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது
Advertisement
முதலில் இதில் 60 முதியவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இந்த முறையில் ஆரோக்கியமான இளைஞர்களின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட 2.5 லிட்டர் பிளாஸ்மா என்னும் திரவம் உடலில் செலுத்தப்பட்டது.
பிளாஸ்மா எனப்படுவது மனித உடலில் இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும் ஒரு திரவமாகும். இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்று அந்நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜெஸ்ஸி கர்மாசின் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையின் முடிவில் வயதாவதனால் ஏற்படக்கூடிய தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இயலும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ஆரம்பத்தில் எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு சரிப்பட்டு வரும் என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.