முகப்பு
உலகம்

சரஹா - நேர்மையைப் பறைசாற்றும் மொபைல் ஆப்பின் திருட்டு வேலை!

உங்கள் நேர்மையை வெளிப்படுத்த உதவும் மொபைல் ஆப் என சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற 'சரஹா' , பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி...

Updated On : 28 ஆகஸ்ட், 2017 at 1:08 PM
பகிர்:

சான் பிரான்சிஸ்கோ: உங்கள் நேர்மையை வெளிப்படுத்த உதவும் மொபைல் ஆப் என சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்ற 'சரஹா' , பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி, தங்கள் நிறுவன சர்வர்களில் சேகரிக்கும் விபரம் வெளிவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு சமயத்திலும் ஒரு குறிப்பிட்ட விஷயம் வைரலாக பரவி கவனத்தினை ஈர்ப்பது வழக்கம்.சமீபத்தில் அவ்வாறு பரபரப்பான ஒரு விஷயம் 'சரஹா' என்னும் மொபைல் அப்ளிகேஷன். இதன் மூலம் நீங்கள் உங்கள் அடையாளத்தினை மறைத்துக் கொண்டு, நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு செய்திகளை அனுப்பவோ அல்லது பெறவோ முடியும்.

இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட நபர் பற்றிய உண்மையான கருத்துக்களை நேர்மையாக பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. ஆனால் பலர் இதனை மற்றவர்களை கேலி செய்ய உதவும் வகையில் ஒரு வாய்ப்பாக    கிண்டலாக பயனப்டுத்தி வந்தனர்.சிலர் இதனை 'மொட்டைக் கடிதம்' என்றும் கூட வர்ணித்தனர்.

Advertisement

இந்நிலையில் 'சரஹா' மொபைல் அப்ளிகேஷனானது பயனாளிகளின் அலைபேசியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களைத் திருடி, தங்கள் நிறுவன சர்வர்களில் சேகரிக்கும் விபரம் தற்பொழுது வெளிவந்துள்ளது.  

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் பிஷப் பாக்ஸ் என்னும் இணையதள பாதுகாப்பு  நிறுவனத்தில், பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றுபவர் சக்கரி ஜூலியன். அங்கு வெளியாகும் 'சண்டே' செய்தித்தாளுக்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:

'சரஹா' மொபைல் அப்ளிகேஷனில் நீங்கள் லாக் இன் செய்த  உடனேயே உங்களது அலைபேசியின் ஆண்ட்ராய்ட் இயங்கு செயலியில் சேகரிக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகள் உள்ளிட்ட  அனைத்தும் சரஹா நிறுவன சர்வர்களுக்கு மாற்றப்படும். இதற்காக ‘BURP Suite’ எனப்படும் கண்காணிப்பு மென்பொருளானது பயன்படுத்தப்படுகிறது.

இந்த அப்ளிகேஷனை உங்கள் அலைபேசியில் நிறுவும் பொழுது இதற்கான அனுமதி கூறப்பட்டாலும், இதன் மூலமாக பயனாளர்களுக்கு என்ன அனுகூலம் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சரஹா அப்ளிகேஷனை உருவாக்கியவரான ஜெயின் அல் அபிதீன் தவ்பீக் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘தொடர்பு எண்கள் சேகரிக்கப்படுவது என்பது இதே ஆப்பினை பயன்படுத்தும் மற்ற நண்பர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுவதற்குத்தான். அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.அதே சமயம் இந்த நடைமுறையானது சரஹாவின் அடுத்த பதிப்புகளில் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் பயனாளர்ளின் தகவல்களைத் திருடுவது என்பது தலைவலி கொடுக்கும் ஒரு தொடர் தொல்லையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.