இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு வெடிப்பில் 59 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சாக் மான் கூறியதாவது:
இராக் தலைநகர் பாக்தாதில் ஷியா பிரிவினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை வியாழக்கிழமை நிகழ்த்தினர். இந்த தாக்குதல் கார் விநியோக மையத்தில் நிகழ்த்தப்பட்டது.
இந்த குண்டு வெடிப்பில், கார் விநியோகஸ்தர் உள்பட 59 பேர் உயிரிழந்தனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றனர் என்றார் அவர். இராக்கின் வடக்கு நகரமான மொசூல் உள்ளிட்ட பல பகுதிகளில் ராணுவத்தினர் நிகழ்த்தி வரும் அதிரடி நடவடிக்கையால் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அவர்கள் தினமும் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர்.
கடந்த அக்டோபரிலிருந்து அமெரிக்க ஆதரவுடன் அரசுப் படை பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, தலைநகர் பாக்தாதை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய மேலும் நான்கு தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.