துருக்கியில் உள்ள கேளிக்கை விடுதியில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இடையே பயங்கரவாதி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதையடுத்து, இரு இந்தியர்கள் உள்பட 39 பேர் பலியாகினர்.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள பிரபல இரவு கேளிக்கை விடுதியில் ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வெளிநாட்டினர் உள்பட நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் அங்கு இருந்தனர்.
அப்போது சான்டா கிளாஸ் வேடம் அணிந்த நபர் அந்த கேளிக்கை விடுதிக்கு வந்தார். தன்னிடமிருந்த துப்பாக்கியால் வெளியில் இருந்த காவலரையும் மற்றொரு நபரையும் சுட்டுக் கொன்றார். பின்னர் விடுதிக்குள் நுழைந்த அந்த நபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த தாக்குதலில் 39 பேர் பலியாகினர். அதில் 21 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களில் 16 பேர் வெளிநாட்டினர். மேலும் 69 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். அவருக்கான தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
புத்தாண்டு வரவைக் கொண்டாடிய அப்பாவி மக்கள் மீது இரக்கமற்ற, கொடூர தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு கூறினார்.
2 இந்தியர்கள் பலி: இதனிடையே, இத்தாக்குதலில் இறந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிப்படுத்தினார். சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "துருக்கி தாக்குதலில் துரதிருஷ்டவசமாக 2 இந்தியர்களை இழந்துவிட்டோம். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் அக்தர் ஹசன் ரிஸ்வியின் மகனான அபிஸ் ரிஸ்வி, குஜராத்தைச் சேர்ந்த குஷி ஷா ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.