லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பீட்சாவை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ள விவகாரம் ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.
நீங்கள் சாப்பிடுகின்ற உணவை விரும்பி உண்ணுங்கள் என்று ஒரு ஆங்கிலப்பழமொழி உள்ளது. அதை இங்கிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிஜமாகவே செய்துகாட்டியுளார்.
இங்கிலாந்தை சேர்ந்த இந்த இளம் பெண்ணின் பெயர் கிறிஸ்டினா வாக்னர் (18). அவருக்கு ‘பீட்சா’ என்றால் கொள்ளை பிரியம்.பலவிதமான ‘பீட்சா’க்களை சாப்பிட்டு ருசி பார்த்த அவர், அதன் மீது காதலாகி, ஒருகட்டத்தில் அதையே திருமணமும் செய்து கொண்டால் என்ன என்று நினைத்தார்.
அதற்காக நாள் குறித்த அவர் தனது பாட்டியின் திருமண உடையை எடுத்தார். அதனை அணிந்து கொண்ட அவர் தன்னை புது மணப்பெண் ஆக்கி கொண்டார். பீட்சாவை திருமணம் செய்யும் விவரத்தை தனது நெருங்கிய நண்பரும், புகைப்பட கலைஞருமான மெர்சி ஹாரிசிடம் தெரிவித்தார்.
உடனே அங்கே வந்த மெர்சி, திருமண உடையுடன் பீட்சாவை கையில் ஏந்தியபடியும், கடித்து சுவைத்தபடியும் க்ரிஸ்டினாவை புகைப்படங்கள் எடுத்தார்.
க்ரிஸ்டினா பின்னர் தான் பீட்சாவை திருமணம் செய்து கொண்ட தகவலை, நண்பர் மெர்சி எடுத்த புகைப்படங்களுடன் தன்னுடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் தகவலாக வெளியிட்டார்.
அவரது இந்த செய்கை பிறருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.