கத்தார் நாட்டுடான உறவை மீண்டும் தொடர்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரபு நாடுகள் தளர்த்தியுள்ளன.
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் துண்டித்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்தால் மீண்டும் உறவைத் தொடரத் தயார் என்று கூறிய அந்த நாடுகள் அதற்காக 13 நிபந்தனைகளை விதித்தன.
அதில் மிக முக்கியமாகக் கருதக் கூடியது, ஈரானுடனான உறவை கத்தார் முறித்துக் கொள்ள வேண்டும் என்பது. கத்தாரில் நிறுத்தப்பட்டுள்ள துருக்கி படைகளை வெளியேற்றுவது, தோஹாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்ஜஸீரா செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தை முடக்குவது, சவூதி கூட்டு நாடுகளுக்குப் பெரும் தொகையை நஷ்ட ஈடாக வழங்குவது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை என்று கத்தார் மறைமுகமாகக் கூறிவிட்டது. இந்நிலையில் தற்போது அதை ஆறாக குறைத்துள்ளதாக சவூதி கூட்டு நாடுகள் அறிவித்துள்ளன. பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண இந்த நிபந்தனைகளை கத்தார் அரசாங்கம் ஏற்க வேண்டும் எனவும் அவை கூறியுள்ளன.