இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் அமெரிக்காவில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் (32). இவர், கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் இவர், அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரிலுள்ள ஹென்றி ஃபோர்டு மருத்துவமனையின் சிறுநீரகப் பிரிவில் மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில், ராகேஷ் குமார், டெட்ராய்ட் நகரிலிருந்து 90 மைல் தொலைவிலுள்ள ஒதுக்குப்புறமான பகுதியிலிருந்த காரின் பின் இருக்கையில் சுடப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து விசாரித்து வருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தக் கொலை இனவெறியின் காரணமாக நடைபெற்றதா? என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று ராகேஷ் குமாரின் தந்தையும், அமெரிக்க-இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான நரேந்திர குமார் தெரிவித்தார். அண்மைக் காலமாக, அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.