பாகிஸ்தான்: பேருந்து விபத்தில் 27 பேர் பலி
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
ராய்விண்ட் நகரத்தில் நடைபெறவிருந்த மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கோகட் என்ற இடத்திலிருந்து 100 பேர் பேருந்தில் புறப்பட்டனர். அவர்கள் சென்ற பேருந்து கல்லர் காஹர் என்ற இடத்தில் நிலைதடுமாறி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. புதன்கிழமை இரவு நடந்த இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 24 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்த 69 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு, மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பஞ்சாப் மாகாண முதல்வர் ஷெபாஸ் ஷெரீஃப் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.