இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிட்டு வந்த பிரிட்டனைச் சேர்ந்த பெண் பயங்கரவாதி ஸாலி ஜோன்ஸ் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் நடத்திய அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் ஸாலி ஜோன்ஸýடன் கணவர் ஜுனயித் ஹுசேன், 12 வயது மகன் ஜோஜோவும் பலியானதாகத் தெரிகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஸாலி ஜோன்ஸ் முஸ்லிமாக மதம் மாறினார். பின்னர் இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார். பிரிட்டனில் இளம் பெண்கள் உள்பட ஏராளமானவர்களை மூளைச் சலவை செய்து ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவில் இணையச் செய்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு சிரியா சென்றார். அவரது கணவர் ஜுனயித் பயங்கரவாதச் செயல்களுக்காக கணினி சேமிப்பகங்களை ஊடுருவும் வேலையைச் செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையின் தாக்குதல்கள் மட்டுமல்லாமல், ரஷியாவின் வான்வழித் தாக்குதலும் தீவிரமடைந்து வந்தது. இந்த நிலையில், மயதீன் பகுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் ஸாலி ஜோன்ஸ், அவருடைய கணவர் ஜுனயித், மகன் ஜோஜோ ஆகிய மூவருமே கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
பன்னிரண்டு வயதான மகன் ஜோஜோவுக்கும் அவர் பயங்கரவாதப் பயிற்சி அளித்தார். சிரியாவில் பிடிபட்ட பிணைக் கைதிகளை ஜோஜோவும் வேறு சிறுவர்களும் சுட்டுக் கொல்லும் காட்சிகள் பயங்கரவாதிகளின் சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.
பிரிட்டன் அரசு வட்டாரங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தி டைம்ஸ் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.