டோக்கியோ: நிலவில் 50 கி.மீ. நீளம் கொண்ட குகை ஒன்று இருப்பது ஜப்பானின் செலீன் விண்கலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கவிஞர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் நிலா என்பது ஆர்வத்துக்குரிய விஷயமாக உள்ளது. எனவேதான், அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யா, இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து நிலவினை ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அந்த வகையில், நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் அனுப்பிய செலீன் விண்கலம் எடுத்த புகைப்படத்தில், நிலவில் 50 கி.மீ. நீளத்துக்கு குகை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 31 மைல் நீளமும், 100 மீட்டர் அகலமும் கொண்ட இந்த குகைக்குள், ரேடியோ கதிர்களை செலுத்தியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், இந்த குகை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த குகையின் ஆழத்தை ஆராய்வதன் மூலம், நிலவின் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளவும், வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.