முகப்பு
உலகம்

சிகரம் தொட்ட இளம் சாதனையாளர் ஆடம் ஓன்றா!

காலையில் மற்ற நாள்களைப் போலத்தான் அந்த நாளையும் உணர்ந்தேன். சற்று வெப்பமான நாளாக இருந்தது,

Updated On : 14 செப்டம்பர், 2017 at 1:39 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:23 PM

'காலையில் மற்ற நாள்களைப் போலத்தான் அந்த நாளையும் உணர்ந்தேன். சற்று வெப்பமான நாளாக இருந்தது, ஆனால் காற்று தெள்ளந் தெளிவாக இருந்தது. ஆனால் நான் சிறிய அழுத்தத்தை உணர்ந்தேன். ஆனால் தெம்பாக இருந்தேன். உலகின் முதல் 9C மலை முகட்டில் ஏற தெம்பு முக்கியம் தானே? மலை உச்சியை நான் அடைந்த கணத்தில், இதற்கு முன் உணராத ஒரு புதுவிதமான உணர்வு நிலைக்குள் சென்றேன்.

என் பயணத்தின் பெருமை மிக்க தருணம் இது. அங்கு நான் வெற்றிக் கொடியை நங்கூரமிட்ட பின், என்னால் சந்தோஷத்தில் கூச்சலிடக் கூட முடியவில்லை. அந்த நொடியில் என்னால் முடிந்த ஒரே விஷயம் கண்கள் கலங்க கயிறில் தொங்கிக் கொண்டிருந்தது தான். ஒருவிதமான விட்டு விடுதலையானது போல அதி அற்புதமாக உணர்வு. 

என்னுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையின் காலம் இந்த 20 நிமிடங்களில் அடங்கி விட்டது போல இருந்தது. இதற்காக மாதக் கணக்கில் வருடக் கணக்கில் பயிற்சி எடுத்திருந்தாலும் மிகவும் குறுகிய நேரத்தில் அது முடிந்துவிட்டது, ஆனால் மிகத் தீவிரமான உணர்வாக அது இருந்தது. நோர்வேயில் செலவிட்ட ஒவ்வொரு நிமிடமும், உடற்பயிற்சிக்காக செய்த ஒவ்வொரு நடவடிக்கையும் முற்றிலும் பயன்மிக்கதாகவே இருந்தது. இத்தனை வேகமாக இதில் ஏறியிருந்தாலும் இந்தப் பயணம் நிச்சயம் அச்சுறுத்துவதாக இல்லை, ஜாலியாகவே இருந்தது. அதுவும் முடியும் தருவாயில் மிகவும் ஜாலியாக உணர்ந்தேன்’ என்று கூறினார் ஆடம் ஓன்றா.

Advertisement

ஆடம் ஓன்றாவின் சமீபத்திய சாதனை மெய்சிலிர்க்கச் செய்வது. நார்வேயின் ஃப்ளாட்ஆங்கேரில் உள்ள ஹான்ஷெல்லரன் (Hanshelleren) எனும் கிரானைட் குகையின் மலை முகட்டில் ஏறி சிகரம் தொட்டது தான் அந்தச் சாதனை. மிகவும் ஆபத்தான அந்த மலை முகட்டில் இதுவரை யாரும் எட்டியதில்லை. மலையேறும் வீரர்களின் பெரும் கனவாகவே ஃப்ளாடாங்கர் இதுவரை இருந்தது. இந்நிலையில், செகஸ்லோவேக்கியாவைச் சேர்ந்த முன்னணி மலையேறும் வீரரான ஆடம் ஓன்ரா இந்த முகட்டின் மீது 20 நிமிடத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.  இந்த இளம் வீரருக்கு 24 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலையேற்ற சாதனைக்கு Project Hard என்று பெயர் வைத்துள்ளார் ஆடம்.

தனது 13-ம் வயதிலிருந்து மலையேற்றத்தில் ஈடுபட்டு வரும் ஆடம், யாருமே ஏறாத மலை முகட்டில் ஏறியதைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியதுதான் மேற்சொன்னது. 2016-ம் ஆண்டின் தொடக்கத்தில் முதன்முறையாக இந்த மலை முகட்டுக்கு வந்த ஆடம், தான் ஏறவேண்டிய பாதையில் துளைகள் இட்டு வைத்தார். இவ்வுலகில் தான் ஏற வேண்டிய மலைகள் அனேகம் உள்ளதாக ஆடம் தெரிவித்தார்.

2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக மலையேற்றம் அறிமுகமாகவுள்ளது. அதற்கான பயிற்சியில் இப்போதிலிருந்து ஆடம் தொடங்கிவிட்டார்.

நிச்சயம் இவர் வெற்றி பெறுவார் என்பது இதிலிருந்தே தெரிகிறது அல்லவா? 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.