லண்டன்: இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள சுரங்க ரெயில் நிலையம் ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் போக்குவரத்திற்கு சுரங்க ரயில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.20 மணி அளவில் மேற்கு லண்டனின் பார்சன்ஸ் கிரீன்ஸ் ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குண்டு வெடித்ததில் நிலையத்தில் தீ பிடித்ததால் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள பயணிகள் பயந்து ஓடியுள்ளனர். பல பயணிகள் காயம் அடைந்து உள்ளனர் எனவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. குண்டு வெடிப்பின் காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என லண்டனின் மெட்ரோ பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.
அதேபோல குறிப்பிட்ட ரெயில் நிலையத்திற்கு வெளியே போலீசார் நிற்கும் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. முதலுதவிக்காக மருத்துவ உதவியாளர்கள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக பார்சன்ஸ் கிரீன்ஸ் ரயில் நிலையம் வழியிலான ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.