முகப்பு
உலகம்

அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்காவிடம் வட கொரியா உறுதிமொழி

அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தயாராக இருப்பதாக, அந்த நாட்டு

Updated On : 10 ஏப்ரல், 2018 at 12:49 AM
டிரம்ப் கிம் ஜோங்-உன்
பகிர்:

அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் தயாராக இருப்பதாக, அந்த நாட்டு அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கிம் ஜோங்குக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்குள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வந்தது.
அமெரிக்காவும் வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், வட கொரியாவுக்கு வந்த தென் கொரிய நல்லெண்ணத் தூதுக் குழுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கூடிய விரைவில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவதாக கிம் ஜோங்-உன் கூறியிருந்தார்.
டிரம்ப் - கிம் ஜோங் சந்திப்பு நடைபெறலாம் என்பதை அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது. எனினும், வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட்டால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தது.
இந்தச் சூழலில், வட கொரிய அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்திருப்பது, இரு நாட்டு அதிபர்களின் சந்திப்புக்கான முக்கிய தடையை நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.