வழக்கு விசாரணையை தவிர்க்க ஷெரீஃப் திட்டம்? மகளுடன் லண்டன் சென்றார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், உடல் நலக்குறைவால் அவதிப்படும் தனது மனைவியைப் பார்ப்பதற்காக புதன்கிழமை லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், உடல் நலக்குறைவால் அவதிப்படும் தனது மனைவியைப் பார்ப்பதற்காக புதன்கிழமை லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவருடைய மகளும் சென்றுள்ளார்.
ஷெரீஃபுக்கு எதிரான ஊழல் வழக்குகளில், குற்றவாளியாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், அவர் பாகிஸ்தான் திரும்புவதற்கு வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, ஜதி உம்ரா, ராய்வின்ட் ஆகிய இடங்களில் உள்ள தனது வீட்டுக்குச் செல்வதற்கு சாலை அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில், தேசியப் புலனாய்வுக் குழுவின் கூட்டு விசாரணைக்கு வரும் 21-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மற்றொரு ஊழல் வழக்கில், வரும் 23-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஷெரீஃப் எப்போது திரும்பி வருவார் என்று அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கவில்லை. எனவே, அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வரமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஷெரீஃபின் பயணம் குறித்து அவருடைய குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ''ஷெரீஃபின் மனைவி பேகம் குல்சூம் நவாஸ், லண்டனில் உள்ள மருத்துமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல் நிலை மோசமாக உள்ளது. எனவே, அவருடன் இருப்பதற்காக, ஷெரீஃபும், அவரது மகள் மரியமும் லண்டன் சென்றுள்ளனர்'' என்றார்.
பேகம் குல்சூம் நவாஸ், தொண்டை புற்றுநோய்க்கு கடந்த ஆண்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அண்மையில் அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலை (இசிஎல்) பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி கடந்த வாரம் வெளியிட்டார். அதில், ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள நவாஸ் ஷெரீஃப் மற்றும், அவரது குடும்பத்தினரின் பெயர் இடம்பெறவில்லை.
பனாமா ரகசிய ஆவணத்தில் ஷெரீஃப் குடும்பத்தினரின் பெயர் இடம்பெற்றிருந்ததால், இசிஎல் பட்டியலில் அவர்களின் பெயர்களை சேர்க்குமாறு தேசியப் புலனாய்வுக் குழு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அவர்களின் பெயர்களை பாகிஸ்தான் அரசு சேர்க்கவில்லை. அரசின் இந்த நடவடிக்கையை, பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஐ-இன்சாஃப் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.