திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய மிக்க புத்த மடாலயத்தில் சனிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
தலைநகர் லாசாவில் "ஜோகாங்' என்ற பழமையான புத்த மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தின் ஒரு பகுதியில் சனிக்கிழமை மாலை 6.40 மணிக்கு திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. பின்னர் படிப்படியாக அந்தத் தீ கோயிலின் மற்ற இடங்களுக்கும் வேகமாகப் பரவியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் மடாலயத்தில் உள்ள சிலைகளுக்கு பாதிப்பு இல்லை என ஜின்ஹுவா தெரிவித்துள்ளது. எனினும், இந்த சம்பவத்தால் யாரும் காயம் அடைந்துள்ளனரா, எவ்வளவு பொருள் இழப்பு ஏற்பட்டது என்பது குறித்த தெளிவான தகவல்களை அந்த செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை.
திபெத் மக்களின் மிகவும் புனித தலமாக "ஜோகாங்' புத்த மடாலயம் விளங்குகிறது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தீ விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ஹாங்காங்கைச் சேர்ந்த சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2000-ஆம் ஆண்டு "ஜோகாங்' புத்த மடாலயத்தை உலகின் மிகவும் பாரம்பரியமிக்க புனிதத் தலமாக அறிவித்தது. இந்த மடாலயம் புத்தரின் 12 வயது உருவச்சிலை உள்ளிட்ட பல புராதான கலாசார பொக்கிஷங்களை உள்ளடக்கியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இந்த புத்த மடாலயத்துக்கு வருகை புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.