'சீன புத்த மடாலய தீ விபத்துக்கு சதி வேலை காரணமில்லை'
திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தமடாலயம் தீக்கிரையான சம்பவத்துக்கு சதி வேலை காரணமில்லை என்பது தெரியவந்துள்ளது.
திபெத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான புத்தமடாலயம் தீக்கிரையான சம்பவத்துக்கு சதி வேலை காரணமில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற தலைநகர் லாசாவில் உள்ள 'ஜோகாங்' புத்த மடாலயத்தில் கடந்த சனிக்கிழமை மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது தளத்தில் பற்றிய தீ மளமளவென பரவத் தொடங்கியதில் 50 சதுர மீட்டர் பரப்பளவிலான பகுதி முழுவதும் எரிந்து சாம்பலாகியது. அதிருஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
புத்த மடாலயம் திடீரென தீப்பற்றியதற்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் இந்த தீ விபத்துக்கு யாருடைய நாச வேலையும் காரணமில்லை உறுதியாகியுள்ளது என்றனர். இந்தியாவின் விகாரா, திபெத் மற்றும் நேபாளம் நாடுகளின் கட்டடக்கலை பாணிகளை ஒருங்கிணைத்து 'ஜோகாங்' புத்த மடாலயம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.