எனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது: பிரபல பாடகியின் தந்தை பேட்டி!
எனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது என்று பிரபல ஆங்கிலப் பாடகி ஏமி வைன்ஹவுஸின் தந்தை மிட்ச் தெரிவித்துள்ளார்.
லண்டன்: எனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது என்று பிரபல ஆங்கிலப் பாடகி ஏமி வைன்ஹவுஸின் தந்தை மிட்ச் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தினைச் சேர்ந்த பிரபலப் பாடகி ஏமி வைன்ஹவுஸ். பாடல் பாடுவதுடன் தானே பாடல்களை இயற்றுபவராகவும் அவர் திகழ்ந்தார். இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதனால் அவர் மரணமடைந்தார்.
மறைந்த பாடகி ஏமி வைன்ஹவுஸ் தனது தந்தை மிட்ச் மீது மிகுந்த பாசம் உடையவராக இருந்தார். தற்பொழுது மகள் மறைந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், தனது மகளின் ஆவி என்னை தினமும் வந்து பார்க்கிறது என்று ஏமி வைன்ஹவுஸின் தந்தை மிட்ச் தெரிவித்துள்ளார்.
Advertisement
இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளிவரும் 'தி சன்' பத்திரிக்கை இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டி விபரம் வருமாறு:
அவள் மறைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் என் மனதினில் ஒரு எண்ணம் தோன்றியது. அதன்படி அவள் எதோ ஒரு வடிவத்தில் என்னிடம் மீண்டும் திரும்பி வருவாள் என்று எண்ணினேன். அதன்படியே நடந்தது; ஆனால் ஸ்தூல வடிவமாக அல்ல... அவள் ஆவி வடிவத்தில் என்னிடம் தினமும் வருகிறாள்.
அவள் ஆவி வடிவில் தினமும் நான் உறங்குகையில் எனது கட்டிலுக்கு வந்து, முனையில் அமர்ந்து கொள்கிறாள். அங்கேயே அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதனால் மனம் துணுக்குற்று, 'உனக்கு என்ன ஆகி விட்டது?' என்று நான் வினவுகிறேன். ஆனால் இப்படி ஒரு வடிவத்திலாவது அவள் என்னுடன் இருக்கிறாள் என்பதே எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.
இவ்வாறு அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.