பாங்காக்: சமீபத்தில் பன்னிரண்டு சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் சிக்கிக் கொண்டு மீட்கப்பட்ட பிறகு, உலகப் புகழ்பெற்ற தாய்லாந்தின் 'தாம் லுவாங்' குகையானது தற்பொழுது மியூசியமாக மாற்றப்பட உள்ளது.
தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள சியாங் ராய் மாகாணத்தில் அமைந்துள்ளது மே சாய் நகரம். மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் மலைப்பகுதியில்தான் 'தாம் லுவாங்' குகைத் தொடர் அமைந்துள்ளது.
கடந்த மாதம் 23-ஆம் தேதி இக்குகையினை பார்வையிட வந்த பன்னிரண்டு சிறுவர்கள் அடங்கிய கால்பந்து அணியும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் எதிர்பாராமல் பெய்த பெருமழையின் காரணமாக குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
பின்னர் ஒரு வாரத்திற்குப் பிறகு அவர்கள் உள்ளே சிக்கி இருப்பது தெரிய வந்தது. பின்னர் தாய்லாந்து கடற்படை வீரர்கள், மீட்புக் குழவினர் மற்றும் சர்வதேச மீட்புக் குழு அணியினரின் முயற்சிகளால் 12 சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் திங்கள்கிழமை அன்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களனைவரும் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உலகப் புகழ்பெற்று விட்ட தாய்லாந்தின் 'தாம் லுவாங்' குகையானது தற்பொழுது மியூசியமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களின் சந்திப்பு ஒன்றில் பேசிய மீட்புக் குழு தலைவரும், முன்னாள் மாகாண ஆளுநருமான நரோங்சக் சோட்டாநாகோர்ன் கூறியதாவது:
இந்த குகைப் பகுதி முழுமைலாக மியூசியமாக மாற்றப்பட உள்ளது. எப்படி சிறுவர்களை மீட்கும் பணி நடைபெற்றது என்பதை விளக்கும் விதமாக பதிவுகள் இங்கு இடம்பெறும்.
அத்துடன் பார்வையாளர்களும் பங்கு பெறும் விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. இது கண்டிப்பாக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான ஒரு இடமாக மாறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.