ஜோகன்னஸ்பர்க்: தென் ஆபிரிக்காவில் கார் கடத்தல் கும்பலுக்கும் பொது மக்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய வம்சாவளி சிறுமி பலியான விவகாரம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது
தென் ஆப்பிரிக்காவின் சாட்ஸ்ஒர்த் பகுதியில் வசித்து வந்த சிறுமி சாடியா சுக்ராஜ் (வயது 9). இவர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஆவார். இவர் திங்களன்று தனது தந்தையுடன் பள்ளி கூடத்திற்கு காரில் சென்றுள்ளார்.
அப்பொழுது அவர்கள் காரினை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது. அதன்பின் சிறுமியின் தந்தையை மட்டும் காரில் இருந்து கீழே தள்ளி விட்ட பின், காருடன் திருட்டு கும்பல் தப்பி சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் சிலர் காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். அந்த சமயத்தில் இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டையும் நடந்துள்ளது. இறுதியாக பூங்கா ஒன்றின் சுவரொன்றில் கடத்தல் கும்பல் காரை மோதியுள்ளது.
இந்த விபத்தில் மூன்று கடத்தல்காரரில் ஒருவன் தப்பி விட்டான். மற்றொருவன் அந்த விபத்தில் பலியாகி விட்டான். ஒருவனை மட்டும் போலீசார் கைது செய்தனர். அதே சமயம் காயத்துடன் கிடந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
ஆனால் அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டாள். இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன் உடனடி நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மரணமடைந்த சிறுமிக்கு சமூக வலை தளத்தில் பலரும் தற்பொழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.