உலகம்

நவம்பர் 11 முதலாம் உலகப் போர் நூற்றாண்டு: சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட மகா யுத்தம்

"மகா யுத்தம்' என்று அழைக்கப்படும் முதலாம் உலகப் போர் முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமையுடன் நூறாண்டு நிறைவு பெறுகிறது.

DIN

"மகா யுத்தம்' என்று அழைக்கப்படும் முதலாம் உலகப் போர் முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமையுடன் நூறாண்டு நிறைவு பெறுகிறது.
 1914-ஆம் ஆண்டு தொடங்கி, சரியாக நூறு ஆண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் - அதாவது நவம்பர் 11-ஆம் தேதி - நேசப் படைகளுக்கும், ஜெர்மனிக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, முதலாம் உலகப் போரின் குண்டு முழக்கங்கள் ஒய்ந்தன.
 ஆனால், அதற்குள் அந்தப் போர் சுமார் 90 லட்சம் வீரர்கள் மற்றும் 70 லட்சம் பொதுமக்களின் உயிர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் காவு வாங்கியது.
 ஐரோப்பாவில் சிறு நெருப்பாகத் தொடங்கி, உலக சரித்திரத்தில் அதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு கண்டங்களையும் சேர்ந்த 7 கோடி ராணுவத்தினரை போர் முனையை நோக்கி ஓட வைத்த அந்தப் போர், அந்தக் காலத்தில் "அனைத்துப் போர்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யுத்தம்' என்று கூறப்பட்டது.
 ஆனால், அந்தப் போரையும் மிஞ்சிய இரண்டாம் உலகப் போருக்கு, இந்த மகா யுத்தம்தான் அடித்தளம் அமைத்தது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
 சொல்லப்போனால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் என்பவை, ஒரே மகா யுத்தத்தின் இரண்டு அத்தியாயங்கள் என்று கூறுவோரும் உண்டு.
 எது எப்படியோ, 4 ஆண்டுகள், 3 மாதங்கள், 2 வாரங்களுக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, பசிபிக் தீவுகள், சீனா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளை கிடுகிடுக்க வைத்த முதலாம் உலகப் போர், உலக சரித்திரத்தில் ஏராளமான வடுக்களை பதித்துவிட்டுச் சென்றுள்ளது.
 இந்தப் போரின்போதுதான் நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், பீரங்கி வண்டிகள், எறிகணைகள் ஆகியவற்றின் திறன்கள் வியத்தக அளவில் மேம்படுத்தப்பட்டன. முதல் முறையாக விமானம் தாங்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டதும் இந்த மகாயுத்தத்தில்தான். குதிரையும், வாளுமாக சண்டையிட்டுக்கொண்டிருந்த புராதான காலத்திலிருந்து, நவீன போர் முறைக்கு உலகை மாற்றியது முதலாம் உலகப் போர்தான்.
 இப்படி உலக சரித்திரத்தையே புரட்டிப் போட்ட முதலாம் உலகப் போரை, இந்த நூற்றாண்டு நிறைவு தினத்தில் மட்டும் நினைத்துப் பாராமல் என்றுமே நினைவில் வைத்திருந்தால்தான், மீண்டும் இத்தகைய பேரழிவிலிருந்து உலகைக் காக்க முடியும் என்கிறார்கள் வரலாற்று நிபுணர்கள்.
 - நாகா
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT