தம்மை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றுவதால் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் (பிரெக்ஸிட்) நடைமுறை எளிமையாகிவிடாது என்று அந்த நாட்டுப் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சியொன்றுக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
அரசியல் என்பது மிகவும் கடினமான பணியாகும். அந்தப் பணியை நான் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகிறேன்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் என் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, என்னை பதவியிலிருந்து நீக்கினால் மட்டும், ஐரோப்பிய யூனியனிலிருந்து
பிரிட்டன் மிக எளிமையாக வெளியேறிவிட முடியாது என்றார் அவர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, வெளியேற்றத்துக்குப் பிறகு பிரிட்டனும், ஐரோப்பிய யூனியனும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த வரைவு ஒப்பந்தத்தை பிரதமர் தெரசா மே அண்மையில் வெளியிட்டார். அந்த ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து, பிரெக்ஸிட் விவகார அமைச்சரான டோமினிக் ராப் உள்பட இதுவரை 6 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.
மேலும், தெரசா மே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஆளும் கட்சி எம்.பி.க்கள் இறங்கியுள்ளனர்.
இத்தகைய சூழலில், தெரசா மே இவ்வாறு தெரிவித்துள்ளார்.