உலகம்

ஆப்கன் தேர்தலில் பயங்கரவாதத் தாக்குதல்கள்: 9 பேர் பலி

தினமணி

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 எனினும், தாக்குதல்களைப் பொருள்படுத்தாமல் ஏராளமான வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் மாகாண பேரவைகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
 ஏற்கெனவே, அந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவித்திருந்தனர். மேலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால், வாக்களிப்பதைத் தவிர்க்கும்படியும் வேட்பாளர்களை அவர்கள் எச்சரித்திருந்தனர். இந்த நிலையில், திட்டமிட்டபடி வாக்குப்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஏராளமான வாக்காளர்கள் பங்கேற்று, தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
 இந்தச் சூழலில், தலைநகர் காபூலில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்ததாகவும், 78 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவத் துறை செய்தித் தொடர்பாளர் மொஹிபுல்லா ஜீர் தெரிவித்தார்.
 இதுதவிர, நாட்டின் பிற பகுதிகளிலும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு, வாக்குப் பதிவில் இடையூறு ஏற்பட்டது. குண்டுஸ் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்களில், 3 பேர் உயிரிழந்ததாகவும், 39 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அந்த மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
 கிழக்கு மாகாணமான நாங்கர்ஹரில், எட்டு இடங்களில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேர் காயமடைந்ததாகவும் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 வாக்குப் பதிவு நீட்டிப்பு: இதற்கிடையே, வன்முறை மற்றும் தேர்தல் பணிகளில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, வாக்குப்பதிவை ஞாயிற்றுக்கிழமை (அக். 21) வரை நீடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
 ஏற்கெனவே, காந்தஹார் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பிரபல காவல்துறை உயரதிகாரி உயிரிழந்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த அந்த மாகாணத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT