மாலத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் முகமது சோலீ வெற்றி பெற்றார். நவம்பரில் நடைபெறும் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சோலீயும் தொலைபேசியில் உரையாடிய போது, அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு மோடிக்கு சோலீ அழைப்பு விடுத்ததாகக் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலேயே முன்னாள் அதிபர் முகமது ரஷீத் வெற்றி பெற்றாலும், அந்தத் தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் செல்லாததாக அறிவித்தது. அதனால் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அப்துல்லா யாமீன், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இரண்டாம் சுற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.
மாலத்தீவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் முகமது யாமீன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் முகமது ரஷீத் போட்டியிடுவதாக இருந்தது. எனினும், யாமீன் அரசு பதிவு செய்துள்ள பல்வேறு வழக்குகளிலிருந்து தப்பி, தற்போது இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரஷீத், போட்டியிலிருந்து விலகினார்.
அதையடுத்து, அவருக்கு பதிலாக இப்ராஹிம் முகமது சோலீ தேர்தலில் போட்டியிட்டார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட முடிவுகளின்படி, 58.3 சதவீத வாக்குகளைப் பெற்று முகமது சோலீ வெற்றி பெற்றார். அதிபர் யாமீனுக்கு 41.7 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
இதையடுத்து, 7-ஆவது அதிபராக முகமது சோலீ வரும் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.