இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இவற்றில் பலியானோர் எண்ணிக்கை திங்கள்கிழமை 310-ஆக அதிகரித்தது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவர்களையும், வெளிநாட்டுப் பயணிகளையும் குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட இடங்களுக்கு வெடிபொருள்களை எடுத்துச் சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை பகலில் தளர்த்தப்பட்டது.
எனினும், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உதவத் தயார் என்று சர்வதேச காவல்துறை (இன்டர்போல்) தெரிவித்துள்ளது. இதனிடையே, குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அதிபர் சிறீசேனா அமைத்துள்ளார். இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி, காவல்துறை முன்னாள் ஐஜி, முன்னாள் சட்டத் துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய அந்த குழு, 2 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.