அமெரிக்காவின் இரு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
24 மணி நேரத்துக்குள் நடைபெற்றுள்ள இந்த சம்பவங்கள் அந்த நாட்டில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
டெக்ஸாஸ் மாகாணம், எல் பாசோ நகரிலுள்ள பிரபல பல்பொருள் அங்காடிக்கு சனிக்கிழமை வந்த 21 வயது இளைஞர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
வாடிக்கையாளர்களின் கூட் டம் அதிகமிருந்த நேரத்தில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்; 26 பேர் காயமடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஓஹி யோ மாகாணம், டேடன் நகரில், வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓரெகன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் கொல்லப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்ப் கண்டனம்: இந்த சம்பவங்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொதுமக்கள் அங்காடியில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்த சாதாரண நாள், இந்த துப்பாக்கிச் சூட்டால் டெக்ஸாஸ் மாகாணத்தின் மிக கோரமான தினங்களில் ஒன்றாகியிருக்கிறது.
எல் பாசோவிலும், டேடன்னிலும் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐயும், உள்ளூர் புலனாய்வு அமைப்புகளும் ஒருங்கிணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தினம் ஒரு தாக்குதல்!
டேடன் நகரில் நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு, அமெரிக்காவில் இந்த ஆண்டின் 250-ஆவது தாக்குதலாகும்.
அந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட சனிக்கிழமை இந்த ஆண்டின் 251-ஆவது நாள் என்ற வகையில், அமெரிக்காவில் சராசரியாக தினமும் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகக் கொள்ளலாம் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.