இலங்கையில் ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அவசரநிலை முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி நடைபெற்ற ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட அவசரநிலையை அதிபர் மைத்ரிபால சிறீசேனா ஒவ்வொரு மாதம் 22-ஆம் தேதியும் நீட்டித்து வந்தார்.
எனினும், அவசரநிலையை மேலும் நீட்டிப்பதற்கான உத்தரவை அவர் இந்த மாதம் 22-ஆம் தேதி பிறப்பிக்கவில்லை.
எனவே, நாட்டில் அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது, 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) ஆதரவு பயங்கரவாத அமைப்பான தேசிய ஜவ்ஹீத் நடத்திய அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அதிபர் மைத்ரிபால சிறீசேனா அவசரநிலை அறிவித்தார்.
பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும், தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் அந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அந்தத் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடைய அனைவரும் கொல்லப்பட்டோ, கைது செய்யப்பட்டோவிட்டதாக போலீஸார் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
இந்தச் சூழலில், அவசரநிலை முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.