சியோல்: இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்ட தென் கொரிய நாட்டின் உயரிய விருதான சியோல் அமைதி விருதினை மோடி பெற்றுக் கொண்டார்.
அமைதி விருது அறக்கட்டளை சார்பில் சியோலில் நடைபெற்ற விமரிசனையான விழாவில், பிரதமர் மோடிக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இவ்விருது தான் ஒருவருக்கு வழங்கப்பட்ட விருதாக இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கௌரவிப்பதாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.
ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது, இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது, ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையே நிலவும் பொருளாதார இடைவெளியைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டது, உலக அமைதியை ஏற்படுத்த பல்வேறு நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருவது ஆகியவற்றுக்காக, 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதை தென் கொரிய நாடு, பிரதமர் மோடிக்கு வழங்கியது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இவ்விருதானது, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக தென்கொரியா சென்றிருக்கும் மோடியிடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்ட போது மோடி கூறியிருந்ததாவது, தென் கொரிய நாட்டுக்கு நன்றி. நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளின் சார்பில் மிகுந்த பணிவுடன் இந்த விருதினை ஏற்றுக்கொள்கிறேன் என்று சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
உலக அமைதிக்குப் பங்களித்து வருபவர்களைப் பாராட்டும் நோக்கில், கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் இந்த விருதை, தென் கொரிய அரசு வழங்கி வருகிறது. ஐ.நா.-வின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அன்னான், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் ஆகியோர் இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதைப் பெறும் 14-ஆவது நபர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.