விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!
அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதாக விஜய் மீது புகார் குறித்து...
அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளை பகடைக் காய்களாகப் பயன்படுத்துவதாக தவெக தலைவர் விஜய் மீது தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியில் முடிவடைந்தது. மே 4 ஆம் தேதியில் வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குச் சேகரிப்புக்காக குழந்தைகளைப் பயன்படுத்தியதாக தவெக தலைவர் விஜய் மீது இந்தியத் தேர்தல் ஆணையத்திடமும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்க் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
Advertisement
புகாரின்படி, குழந்தைகளை பெற்றோரிடம் அடம்பிடிக்க வைத்து விஜய் வாக்கு சேகரித்ததாகக் கூறுகிறது. அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது.
இதனால், குழந்தைகள் அழுவது, பிடிவாதம் பிடிப்பது போன்ற பாதிப்புக்குள்ளாகி, குழந்தைகள் மூலம் வாக்காளர்களைப் பாதிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது.
குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்யக் கூடாது என 2023 ஆம் ஆண்டிலேயே தேர்தல் விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தத் தேர்தல் விதிகளை மீறிய விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்களிடமும் விஜய் மன்னிப்பு கோர வேண்டும்.
மேலும், இதனை மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.