முகப்பு
உலகம்

டிரம்ப்-கிம் சந்திப்புக்கு வியத்நாம் உச்சகட்ட பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்புக்காக வியத்நாமின் ஹனோய் நகரில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:14 am IST
கிம் ஜோங் உன், டொனால்ட் டிரம்ப் (கோப்புப் படம்).
பகிர்:


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்புக்காக வியத்நாமின் ஹனோய் நகரில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அவர்கள் இருவரும் புதன் மற்றும் வியாழக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். கிம் ஜோங் நீண்ட ரயில் பயணத்தின் மூலம் ஹனோய்க்கு வரும் நிலையில், டிரம்ப் தனி விமானம் மூலம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருவரின் முதல் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், தற்போது 2-ஆவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் வருகையையொட்டி ஹனோய் நகரில் உச்சபட்ச பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வியத்நாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிரம்ப்-கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்ய சிங்கப்பூருக்கு சுமார் 2 மாதங்கள் அவகாசம் இருந்தது. ஆனால், எங்களுக்கு 10 நாள்களே வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், திங்கள்கிழமையுடன் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று ஹனோய் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியத்நாம் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் லி ஹோவாய் டிரங் கூறுகையில், டிரம்ப்-கிம் சந்திப்பையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் உச்சகட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். 
கிம்மின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகுந்த கவனம் செலுத்தும் வட கொரிய அதிகாரிகள், வியத்நாம் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர். 
வியத்நாமில் உள்ள டாங்டங் நகர ரயில் நிலையத்துக்கு கிம் வந்தடைவதால், அங்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கிருந்து கார் மூலமாக அவர் ஹனோய் நகரைச் சென்றடைகிறார். அவர் பயணிக்கும் சாலையில், பொதுப் போக்குவரத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையிலான தடையை வியத்நாம் அறிவித்துள்ளது.
சிறப்பான பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஹனோய் நகருக்கு கிம் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்புக்கு சீனாவிடம் இருந்து கடன் வாங்கிய விமானத்தில் கிம் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், வியத்நாம் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் குயென் மான் ஹங் கூறுகையில், டிரம்ப்-கிம் சந்திப்பு செய்தியை சேகரிப்பதற்காக 40 நாடுகளைச் சேர்ந்த 3,000 பத்திரிகையாளர்கள் ஹனோய் நகருக்கு வருகின்றனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.