ஆர்ஜென்டீனாவில் விலங்குகள் நடமாடும் பாலைவனத்தில் காணாமல் போன 5 வயது சிறுவன், 24 மணி நேரத்துக்கு பின்னர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
ஆர்ஜென்டீனாவின் சான் ஜூவான் மாகாணத்தில் உள்ள பாலைவனத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, தனது குடும்பத்தினருடன் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சிறுவன் பாதை மாறி தொலைந்து போனதாகவும், அதையடுத்து அவனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அந்த சிறுவனது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர்களுடன் 1, 000 தன்னார்வலர்களும் இணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 24 மணி நேரத்துக்கு பின்பு, தொலைந்து போன இடத்தில் இருந்து 21 கி.மீ தொலைவில் அந்த சிறுவனை அவர்கள் கண்டுபிடித்தனர். உடலில் வறட்சி ஏற்பட்ட காரணத்தால் இப்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதுகுறித்து அந்த சிறுவன் கூறுகையில், இரவு நேரத்தில் மிகவும் குளிராக இருந்தது. பாறையில் படுத்து உறங்கினேன். பசித்தபோது புற்களையும், தாகம் ஏற்பட்டபோது, செடிகளின் தண்டுகளையும் சாப்பிட்டேன் என்றான்.
இதுதொடர்பாக அவனை கண்டறிந்தவர் கூறுகையில், சிறுவனாக இருந்து கொண்டு, பாலைவனத்தில் தனியாக 24 மணி நேரம் கழித்தது சாதாரண விஷயம் அல்ல. நான் அவனைத் தேடி சென்ற வழியில் பல விலங்குகள் இருந்தன. அவைகளிடம் இருந்து தப்பி அவன் உயிருடன் இருந்தது ஆச்சரியமாக இருந்தது என்றார்.