உலகம்

பாகிஸ்தானில் ஹிந்துச் சிறுமிகள் கட்டாய மதமாற்றம்; திருமணம்: இஸ்லாமாபாத்  உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு 

ANI

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஹிந்துச் சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரவீனா(13) மற்றும் ரீனா(15) ஆகிய இரு சிறுமிகளும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவர்களது இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டனர். அதையடுத்து அவர்களுக்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்களுடன் கட்டாயத் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த காட்சிகள் பதிவான விடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அந்த இரு சிறுமிகளின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், குழந்தைத் திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.  இந்நிலையில், அந்த இரண்டு சிறுமிகளும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவால்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையிட்டனர்.

இதனிடையே, அந்த சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு உதவி செய்ததாக  கூறப்படும் 'நிகா கிவான்' என்னும் திருமணம் செய்து வைக்கும் அலுவலர் மற்றும் திருமணம் செய்து கொண்ட இரு மணமகன்களின் உறவினர்கள் என மொத்தம் 7 பேரை பாகிஸ்தான் காவல் துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஹிந்துச் சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட்ட விவகாரத்தில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பிட்ட இரு சிறுமிகள் மற்றும் அவர்களது கணவர்கள் சார்பில் காவல்துறை நடவடிக்கைக்கு தடைகோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குறிப்பிட்ட இரு சிறுமிகளும் தாங்கள் கடந்த 20-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், இஸ்லாம் மதத்தின் கருத்துக்கள் பிடித்த தால், தாங்களே விரும்பி இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர் 22-ஆம் தேதி சட்ட உதவி கோரியதாகவும் தெரிவித்துள்ளனர்.  உயிருக்கு ஆபத்து இருக்கும் என்பதால் பெற்றோர்க்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த சிலர் மற்றும் ஹிந்து கவுன்சில் உறுப்பினர்கள் சிலர் இது தொடர்பாக தவறான தகவலை பரப்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அதார் மின்னாலா பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

இது மிகவும் முக்கியமான வழக்கு. பாகிஸ்தானின் மரியாதையும் இதில் அடங்கியுள்ளது  இங்குள்ள சிறுபான்மையினரின் உரிமைகளை காப்பது நமது கடமையாகும். இந்த வழக்கை பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கவனித்து வருகிறார்கள் என்பதை அறிவேன்.

தற்போது குறிப்பிட்ட இரு சிறுமிகளின் பாதுகாப்பை அரசே பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்,. இருவரையும் அரசு பாதுகாப்பு இல்லம் ஒன்றில் தங்க வைப்பதோடு, அவர்களது வயதினை உறுதி செய்வதற்கான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் இருவர் பெண்களின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். கண்காணிப்பாளர் தகுதியிலிருக்கும் பெண் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்களுடன் இருந்து அவர்களது  பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்ட உடனே சிறுமிகள் இருவரும் அரசு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதே சமயம் பாதுகாப்புக் கோரி குறிப்பிட்ட சிறுமிகளின் கணவர்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையானது ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT