அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரின் டங்கன் எனுமிடத்தில் அமைந்துள்ள வால்மார்ட் நிறுவனத்தில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். வால்மார்ட் முன்பு அமைந்துள்ள கார் நிறுத்தத்தில் காலை 10 மணியளவில் மர்ம நபரால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 3 பேர் உயிரிழந்ததாக அப்பகுதி போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, காலிஃபோர்னியாவில் கால்பந்து விளையாட்டைக் காண வந்தவர்கள் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர், 6 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தனர்.
முன்னதாக, ஜூலை மாதம் மிஸ்ஸிஸிப்பியில் உள்ள வால்மார்ட் மற்றும் ஆகஸ்ட் மாதம் டெக்ஸாஸின் எல்பாசோவில் உள்ள வால்மார்ட் வணிக நிறுவனங்களில் இதேபோன்று மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.