பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளைக் கண்காணித்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தொடங்கப்பட்ட எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வருடாந்திர கூட்டம், பாரீஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எஃப்ஏடிஎஃப் அமைப்பின் நிர்வாகிகள் கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர்.
பயங்கரவாதச் சம்பவங்களுக்குத் துணைபோனதற்காக, பாகிஸ்தானை "கிரே' பட்டியலில் எஃப்ஏடிஎஃப் அமைப்பு கடந்த ஆண்டு வைத்தது. அத்துடன் 27 அம்ச செயல் திட்டங்களை அக்டோபர் 2019-க்குள் நிறைவேற்றாவிட்டால், ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளைப் போன்று பாகிஸ்தானும் கறுப்பு பட்டியலில் வைக்கப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதில் பாகிஸ்தான் 6 அம்ச செயல் திட்டங்களை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாகிஸ்தானை கடுமையாக எச்சரிக்கும் விதமாக 'டார்க் கிரே' பட்டியலில் வைக்க வாய்ப்புள்ளது. இதுவே கறுப்புப் பட்டியலுக்கு முந்தைய கடைசி கட்ட எச்சரிக்கையாகும்.
இதுகுறித்து அக்டோபர் 18-ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு நீடித்தால் பன்னாட்டு நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய சர்வதேச நிதியமைப்புகளிடம் இருந்து பாகிஸ்தான் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, எஃப்ஏடிஎஃப் அமைப்பின் தற்போதைய தலைவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.