தங்களது அமைப்பிலிருந்து பிரிட்டன் விலகியதற்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு உறவு தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜீன்-கிளாட் ஜங்க்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பிரெக்ஸிட் தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின்போது பொய் செய்திகள் பரப்பப்பட்டதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் இன்னும் அதிகமாக மேற்கொண்டிருக்கலாம். பிரெக்ஸிட்டுக்கான அக். 31-ஆம் தேதி கெடு நெருங்கி வரும் சூழலிலும், ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் அதுதொடர்பான ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று நம்புகிறேன் என்றார் அவர்.